பல மாநிலங்களின் எல்லைப் பகுதியாகவும், போதிய சுகாதார வசதி இல்லாத ஒரு கிராமமாக இருந்தாலும், ஒடிசாவின் கோசகுமுடா பகுதி, பலேங்கா கிராமத்தில் இதுவரை கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒடிசாவின் ஊரகப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த பலேங்கா கிராமம், கரோனா அதிகம் பாதித்திருக்கும் சட்டீஸ்கர் மாநில எல்லைக்கு மிக அருகே அமைந்துள்ளது.
ஆனால், கிராம மக்கள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கடும் கட்டுப்பாடுகளும்தான் இதுவரை அங்கு கரோனா தொற்றால் நுழைய முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இங்கு 1,623 பேர் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கல்வியறிவு இல்லாதவர்கள். ஏற்கனவே பல வியாதிகளுக்கு கைவைத்தியத்தை பின்பற்றும் இவர்கள் கரோனா பெருந்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளையும் கட்டுப்பாட்டுடன் பின்பற்றி வருகிறார்கள்.
கிராமத்தின் அனைத்து எல்லைப் பகுதிகளையும் மூடிவிட்ட கிராமத்தினர், அனைவரும் வெளியில் வரும் போது முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தப்படுத்துவது போன்றவற்றை முறையாகப் பின்பற்றுகிறார்கள். அரசு சார்பில் இந்த கிராமத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வுதான், இதற்குக் காரணம் என்கிறார்கள் சுகாதாரத் துறையினர்.