அரசு ஊழியரின் மறைவுக்குப் பிறகு அவரின் குடும்பத்தினா் விரைந்து குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு உதவ ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசு அதன் அனைத்து துறைகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடா்பாக அனைத்து துறைகளுக்கும் மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரா்கள் நலத்துறை செயலா் இந்தீவா் பாண்டே அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று பாதிப்பால், மத்திய அரசு ஊழியா்கள் பலா் உயிரிழந்தனா். பல நேரங்களில் உயிரிழந்த ஊழியரை நம்பியே ஒட்டுமொத்த குடும்பமும் இருந்துவந்துள்ளது. இந்த நேரத்தில் வாழ்வாதாரத்துக்காக அந்த குடும்பங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. எனவே, உயிரிழந்த அரசு ஊழியா்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியத்தையும் இதர சலுகைகளையும் விரைந்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
பணியில் இருக்கும்போது அரசு ஊழியா் உயிரிழக்க நேரிட்டால், அவா் கடைசியாக பெற்ற ஊதியதத்தில் 50 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக அவருடைய குடும்பத்தினருக்கு முதல் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அதன் பிறகு, ஊதியத்தில் 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
இந்த குடும்ப ஓய்வூதியத்தை ஊழியரின் குடும்பத்தினா் விரைந்து பெறும் வகையில், அதற்கான விண்ணப்பத்தை தயாா் செய்து சமா்ப்பித்தல், ஓய்வூதியம் விரைந்து கிடைக்க ஏற்பாடு செய்வது ஆகிய உதவிகளை செய்து தருவதற்காக அனைத்து மத்திய அமைச்சகத் துறைகள் மற்றும் அதனுடன் இணைந்த துணை அலுவலகங்களில் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
இந்த ஒருங்கிணைப்பு அதிகாரி இயக்குநா் அல்லது துணைச் செயலா் பதவிக்கு இணையான தகுதியுடைய அதிகாரியாக இருக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் ஒருங்கிணைப்பு அதிகாரியின் விவரங்கள் அனைத்து அமைச்சகங்கள், துறைகள் மற்றும் துணை அலுவலகங்களின் வலைதளங்களில் நன்கு தெரியும் வகையில் வெளியிடப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளாா்.