ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாப்பாக வெடிக்கவைக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையின் கூட்டுப் படையினர், இன்று காலை வழக்கமான தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த போது, புல்வாமா மாவட்டம் திரால் அருகே சைமு என்ற பகுதியில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியைக் கண்டுபிடித்து அகற்றினர்.
கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டதும், வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கண்ணிவெடியை பாதுகாப்பான முறையில் வெடிக்க வைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இதே திரால் பகுதியில் கடந்த ஞாயிறன்று மத்தியப் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.