மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர்கள் மீது வன்முறை ஏவப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக எம்எல்ஏ-வுமான சுவேந்து அதிகாரி தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தது:
"அமித் ஷாவுடனான சந்திப்புக்காக திங்கள்கிழமை இரவு அதிகாரி தில்லி வந்தடைந்தார். அமித் ஷாவைத் தொடர்ந்து, பல்வேறு மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்களை அவர் செவ்வாய்க்கிழமை சந்திக்கிறார். புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் சந்திக்கவுள்ளதாகத் தெரிகிறது."
மேற்கு வங்கத்தில் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் பாஜக தொண்டர்கள் மீது பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியதாகத் தகவல்கள் வெளியாகின. வன்முறையில் பல்வேறு தொண்டர்கள் கொல்லப்பட்டதாக பாஜக குற்றஞ்சாட்டியது. ஆனால், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தது.