மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக எம்எல்ஏ-வுமான சுவேந்து அதிகாரி தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து சுவேந்து அதிகாரி கூறியது:
"பிரதமர் மோடி, ஜெ.பி. நட்டாவைச் சந்தித்து மேற்கு வங்கத்தில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து விரிவாக எடுத்துரைத்தேன். 40-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு வன்முறை முடிய வேண்டும்."
மேலும் தகவலறிந்த வட்டாரங்கள் இதுபற்றி கூறியது:
"மேற்கு வங்கத்தில் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பாஜக நிர்வாகிகள் மீது வன்முறை ஏவப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து பிரதமர் மோடியிடம் அதிகாரி எடுத்துரைத்தார். பாஜக தொண்டர்கள் எப்படி பயத்தில் இருக்கிறார்கள், பல்வேறு கட்சித் தொண்டர்கள் மேற்கு வங்கத்திலிருந்து வெளியேறி அசாமில் வசித்து வருவதாக மோடியிடம் கூறியுள்ளார்."
சுவேந்து அதிகாரி திங்கள்கிழமை இரவு தில்லி வந்தடைந்தார். செவ்வாய்க்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்களைச் சந்தித்தார்.
முன்னதாக, மேற்கு வங்கத்தில் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் பாஜக தொண்டர்கள் மீது பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியதாகத் தகவல்கள் வெளியாகின. வன்முறையில் பல்வேறு தொண்டர்கள் கொல்லப்பட்டதாக பாஜக குற்றஞ்சாட்டியது. ஆனால், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தது.