புது தில்லி: நாட்டில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஒரே ஒரு தீர்வுதான்.. அது தடுப்பூசி செலுத்துவதுதான் என்றாலும், பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால், தடுப்பூசி திட்டம் தொய்வடைந்துள்ளது.
இந்த நிலையில், மாநில அளவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது மற்றும் வீணடிக்கப்பட்ட அளவு குறித்த புள்ளி விவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அந்த வகையில், கடந்த மே மாதத்தில் கேரளமும், மேற்கு வங்கமும் தடுப்பூசி மருந்துகளை வீணடிக்காமல், முழுவதுமாக பயன்படுத்தியிருக்கின்றன. அதாவது, கேரளமும், மேற்கு வங்கமும் முறையே 1.10 லட்சம் மற்றும் 1.61 லட்சம் கரோனா தடுப்பூசிகளை முழுவதும் பயன்படுத்தி, சுகாதாரத் துறையின் பாராட்டுகளைப் பெற்றுள்ளன.
ஆனால், நாட்டிலேயே ஜார்க்கண்ட் மாநிலம் 33.95 சதவீதம் அளவுக்கு கரோனா தடுப்பூசியை வீணடித்து, தடுப்பூசி மருந்து வீணடிப்பதில் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கடுத்து, சத்தீஸ்கர் 15.79 சதவீதமும், மத்தியப் பிரதேசம் 7.35 சதவீத மருந்தையும் வீணடித்துள்ளன.
அதாவது, நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 790.6 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில், 658.6 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் 610.6 லட்சம் பேருக்குத்தான் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமிருக்கும் தடுப்பூசியின் அளவு 212.7 லட்சம் என்று கூறப்படுகிறது.