ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜிதின் பிரசாதா புதன்கிழமை பாஜகவில் இணைந்தார்.
அவர் பாஜகவில் இணைந்தது பற்றி கபில் சிபல் கூறியது:
"கட்சித் தலைமைக்கு பிரச்னைகள் என்னவென்று தெரியும். அவர்கள் கேட்டறிவார்கள் என்றும் நம்புகிறேன். காரணம், பிரச்னையைக் கேட்டறியாமல் எதுவும் இங்கு தங்காது. கேட்கும் திறனில்லையெனில், மோசமான நாள்களை நோக்கி விழக்கூடும்.
ஜிதின் பிரசாதா செய்ததற்கு நான் எதிரானவன் இல்லை. அவர் செய்ததற்கு ஏதேனும் காரணம் இருந்திருக்கும், அது வெளியிடப்படவில்லை. ஆனால், அவர் பாஜகவில் இணைந்திருப்பதைத்தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை" என்றார்.
இதையடுத்து, கட்சியின் மீது காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை இழந்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளிக்கையில், "நாங்கள் உண்மையான காங்கிரஸ்காரர்கள். பாஜகவில் இணைவது பற்றி ஒருபோதும் சிந்திக்க மாட்டோம். கட்சித் தலைமை என்னை விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டால், அதன் அடிப்படையில் கட்சியிலிருந்து விலகுவேன். ஆனால், பாஜகவில் இணைய மாட்டேன்" என்றார் சிபல்.
கட்சியில் சீர்திருத்தம் மேற்கொள்ளக்கோரி இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய தலைவர்களில் கபில் சிபல் மற்றும் ஜிதின் பிரசாதா ஆகியோரும் உள்ளடங்குவர்.