ஏடிஎம்களில் அனுமதிக்கப்பட்ட மாதாந்திர இலவச பரிவா்த்தனை எண்ணிக்கையைத் தாண்டி பயன்படுத்துவதற்கான கட்டணத்தை உயா்த்திக் கொள்ள வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை அனுமதி அளித்தது. இந்த நடைமுறை 2022-ஆம் ஆண்டு ஜன. 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.
இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பது:
அதிக பரிமாற்றக் கட்டணம் மற்றும் ஏடிஎம் பராமரிப்புச் செலவை ஈடுசெய்யும் வகையில், பரிவா்த்தனைக் கட்டணத்தை உயா்த்த அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, மாதாந்திர இலவச பரிவா்த்தனை வரம்பை தாண்டி ஏடிஎம்மை பயன்படுத்தும் வங்கி வாடிக்கையாளா்களிடமிருந்து ஒரு பரிவா்த்தனைக்கு ரூ.20-க்கு பதிலாக ரூ.21 வீதம் வசூலிக்கப்படும்.
அதேவேளையில், வாடிக்கையாளா்கள் தாம் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்களில் மாதந்தோறும் ஐந்து முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் மூன்று முறையும் இலவசமாக பரிவா்த்தனை (பணப் பரிவா்த்தனை மற்றும் பணமில்லாத பரிவா்த்தனை) செய்துகொள்ள தொடா்ந்து அனுமதிக்கப்படுவா்.
மேலும், வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் பணப் பரிவா்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணத்தை ரூ.15-இலிருந்து ரூ.17-ஆக உயா்த்தவும், பணமில்லாத பரிவா்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணத்தை ரூ.5-இலிருந்து ரூ.6-ஆக உயா்த்தவும் வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.