தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை ஆமதாபாத் செல்கிறார்.
கடந்த 6 மாதங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு கேஜரிவால் செல்வது இது இரண்டாவது முறை.
ஆமதாபாத் பயணத்தின்போது கட்சியின் மாநிலத் தலைமையகத்தை அவர் திங்கள்கிழமை திறந்து வைக்கிறார்.
ஆம் ஆத்மியின் குஜராத்துக்கான ஊடகப் பொறுப்பாளர் தெரிவிக்கையில், "ஆம் ஆத்மியின் மாநிலத் தலைமையகத்தைத் திறக்க கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை ஆமதாபாத் வருகிறார்" என்றார்.
இதுதவிர கேஜரிவால் வருகையின்போது சில பிரபலங்களும் கட்சியில் இணையப்போவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வரவேற்பு கிடைத்ததையடுத்து, கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சூரத்தில் கேஜரிவால் சாலைப் பேரணி நடத்தியது குறிப்பிடத்தக்கது