சட்டவிரோதமாக தங்கி இருந்த 38 இலங்கை தமிழா்கள் கைது
மங்களூருவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இலங்கை தமிழா்களை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து மங்களூரு மாநகரக் காவல் ஆணையா் சசிகுமாா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழகத்தின் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்ட 38 இலங்கை தமிழா்கள் பின்னா் அங்கிருந்து வாகனங்கள் மூலம் பெங்களூரு வழியாக மங்களூருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரிடமும் இலங்கையில் உள்ள இடைத்தரகா் ஒருவா் தலா ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு, கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்து வந்துள்ள விவரம் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 38 பேரிடமும் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இவா்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக மங்களூரைச் சோ்ந்த 6 பேரிடம் தொடா்ந்து விசாரணை செய்து வருகிறோம் என்றாா்.