மும்பை: மும்பை கண்டிவாலா தொகுதியில் சாலையில் கழிவுநீர் தேக்கத்தை சுத்தம் செய்யத் தவறியதாகக் கூறி, ஒப்பந்ததாரரைக் கழிவு நீரில் அமரவைத்த அவரது தலையில் எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் குப்பை கொட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மாநகரில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மும்பைக்கு உள்பட்ட கண்டிவாலா தொகுதியில் மழைநீருடன் கழிவு நீர் சேர்ந்து சாலைகளில் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், தொகுதியைச் சேர்ந்த சிவசேனை சட்டப்பேரவை எம்.எல்.ஏ திலீப் லண்டேவிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சட்டப்பேரவை உறுப்பினர் திலீப் லண்டே, கழிவுநீரை அகற்றும் ஒப்பந்ததாரரை அழைத்து, கழிவுநீரைச் சுத்தம் செய்ய தவறியதாக கூறி, அவரை சாக்கடை நீரில் அமரவைத்துள்ளார். அப்போது, அவரது ஆதரவாளர்களிடம் ஒப்பந்ததார் தலையில் கும்பைகளை கொட்டுமாறு கேட்டுக்கொண்டார். உடனே அவரது ஆதரவாளர்கள் எப்போதும் போல, அதை கம்பீரமாக செய்துள்ளனர்.
இதை அங்கிருந்த ஒருவர் விடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், பேரவை உறுப்பினர் திலீப் லண்டேவின் செயலுக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, கடமை செய்ய தவறியதால் இப்படியான தண்டனை வழங்கப்பட்டதாக என்று திலீப் லண்டே விளக்கம் கொடுத்துள்ளார்.