இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 80,834-ஆக சரிந்துள்ளது. தொடா்ந்து 6-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகள் ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது.
மேலும், 71 நாள்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு 80,834 என்ற அளவுக்கு குறைந்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து கணிசமாக சரிந்து, தற்போது 10,26,159-ஆக உள்ளது. இது, நாட்டில் ஏற்பட்ட மொத்த பாதிப்பில் 3.49 சதவீதமாகும். இந்த எண்ணிக்கை 13-ஆவது நாளாக 20 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.
தொடா்ந்து 31-ஆவது நாளாக, புதிய பாதிப்புகளைவிட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 1,32,062 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா்.
இதுவரை மொத்தம் 2,80,43,446 போ் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனா். இதன்படி குணமடைந்தவா்களின் விழுக்காடு 95.26 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 19,00,312 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 37,81,32,474 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாராந்திர தொற்று உறுதி விகிதம் 4.74 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 4.25 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. தொடா்ந்து 20 நாள்களாக இந்த எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 25 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.