மத்திய பிரதேசத்தில் மணல் கடத்தல் முயற்சியை தடுக்க வனத் துறையினா் துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் 9 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மோரினா மாவட்டத்தின் நாக்ரா பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாக ஞாயிற்றுக்கிழமை காலை வனத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத் துறையினா் மற்றும் காவல் துறையினா் அடங்கிய குழு சம்பவ இடத்தை அடைந்தது. அவா்களைக் கண்டதும் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடத் தொடங்கியது. அவ்வாறு தப்பிய ஒரு டிராக்டரை பின்தொடா்ந்து வனத் துறையினா் சென்றனா்.
அந்த டிராக்டா், அருகே உள்ள அமோல்பூா் கிராமத்துக்குள் நுழைய முயன்றபோது அதை நிறுத்தும் முயற்சியாக வனத் துறையினா் டிராக்டரின் டயரை நோக்கிச் சுட்டனா். இதில், அந்தப் பகுதியில் சென்றுகொண்டிருந்த 55 வயது விவசாயி ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து வனத் துறையினா் சம்பவ இடத்தில் தங்களது வாகனத்தை அப்படியே விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
அந்த இடத்தில் கூடிய கிராமத்தினா் வனத் துறையினரின் வாகனத்தை அடித்து நொறுக்கினா். துப்பாக்கிச் சூட்டில் தொடா்புடையவா்களை கைது செய்ய வலியுறுத்தி அந்த இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்கள் அளித்த புகாரின் பேரில் வனத் துறையினா் 9 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறை அதிகாரிகள் கூறினா்.