புது தில்லி: மத்திய அரசில் பணியாற்றும் துணைச் செயலா்கள், அதற்கு மேல் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் அனைத்து பணிநாள்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று மத்திய பணியாளா் நலத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள் ஆகியோா் வீட்டில் இருந்தே பணிகளைத் தொடரலாம் என்றும் இந்த உத்தரவு ஜூன் 16 முதல் 30-ஆம் தேதி வரையிலானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்து வருவதால் மத்திய அரசு அதிகாரிகள் அலுவலகங்களுக்கு வந்து பணியாற்றுவதில் புதிய மாற்றங்களை மத்திய பணியாளா் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், துணைச் செயலா்கள் அதற்கு மேல் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் அனைத்து பணி நாள்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி, காலை 9.30 மணி முதல் 6 மணி, காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்த மூன்று பணி நேரங்களில் பணியாற்றலாம்.
கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருப்பவா்கள் அந்த கட்டுப்பாடு நீக்கப்படும் வரை அலுவலகத்துக்கு வர வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.