கோவிஷீல்டு தடுப்பூசி தவணைகளுக்கான இடைவெளியை அதிகரித்தது ஏன்?

அடினோவெக்டர் தடுப்பூசிகளின் இயங்குமுறை தொடர்பான அறிவியல்பூர்வமான காரணங்களின் அடிப்படையிலேயே கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு தவணைகளுக்கான இடைவெளியை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்
கோவிஷீல்டு தடுப்பூசி தவணைகளுக்கான இடைவெளியை அதிகரித்தது ஏன்?
கோவிஷீல்டு தடுப்பூசி தவணைகளுக்கான இடைவெளியை அதிகரித்தது ஏன்?

புது தில்லி: அடினோவெக்டர் தடுப்பூசிகளின் இயங்குமுறை தொடர்பான அறிவியல்பூர்வமான காரணங்களின் அடிப்படையிலேயே கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு தவணைகளுக்கான இடைவெளியை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தொழில்நுட்ப நிலை உள்குழு அளித்த பரிந்துரையின்படியே, கோவிஷீல்டு தடுப்பூசிகளின் இரண்டு தவணைகளுக்கான இடைவெளி அதிகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அளிக்கப்பட்ட விளக்கத்தில், 

கோவிஷீல்டு தடுப்பூசிகளின் இரண்டு தவணைகளுக்கான இடைவெளியை 6-8 வாரங்களில் இருந்து 12-16 வாரங்களாக அதிகரித்த முடிவு தொடர்பாக தொழில்நுட்ப நிபுணர்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக ஒரு சில ஊடக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடினோவெக்டர் தடுப்பூசிகளின் இயங்குமுறை தொடர்பான அறிவியல்பூர்வமான காரணங்களை அடிப்படையாகக் கொண்டே இடைவெளியை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து, கொவிட்-19 பணிக்குழு மற்றும் தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தொழில்நுட்ப நிலை உள்குழுவில் முழுவதும் விவாதிக்கப்பட்டதுடன், எந்த உறுப்பினரும் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கொவிட்- 19 பணிக்குழுவின் 22-வது கூட்டம் கடந்த மே 10-ஆம் தேதி நடைபெற்றது. தேசிய தடுப்பு மருந்துக் கொள்கையின் கீழ் கோவிஷீல்டு தவணைகளுக்கான இடைவெளியை மாற்றியமைக்கும் திட்ட முன்மொழிவை கொவிட்-19 பணிக்குழு ஏற்றுக்கொண்டது. 

இதற்கு முன்பு எடுக்கட்ட முடிவு, ஆய்வுக் கூட சோதனை அடிப்படையிலானது என்றும், தற்போது உண்மையில் கிடைத்த ஆதாரங்களை, குறிப்பாக இங்கிலாந்தில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு தவணைகளுக்கான இடைவெளியை 12-16 வாரங்களாக அதிகரிக்க கொவிட்-19 பணிக்குழு சம்மதம் தெரிவிக்கிறது என்று அக்குழு பரிந்துரைத்தது.

உயிரி தொழில்நுட்பத் துறைச் செயலாளர், மருத்துவ ஆராய்ச்சித் துறைச் செயலாளர், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைமை இயக்குநர் ஆகியோர் தலைமையில் கடந்த மே 13-ஆம் தேதி நடைபெற்ற தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தொழில்நுட்ப நிலை உட்குழுவின் 31-வது கூட்டத்தில் கொவிட்-19 பணிக் குழுவின் பரிந்துரை கூடுதல் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தொழில்நுட்ப நிலை உள்குழு, கீழ்க்காணும் பரிந்துரையை அளித்தது:

‘கொவிட்-19 பணிக்குழுவின் பரிந்துரையின்படி, கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு தவணைகளுக்கு இடையே குறைந்தபட்சம் மூன்று மாத இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com