தில்லி சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை இடதுசாரி கட்சித் தலைவர்களான சீத்தாராம் யெச்சூரி மற்றும் து.ராஜா ஆகியோரை சந்தித்து பேசினார்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் தில்லி சென்றுள்ளார். இந்த பயணத்தில் பிரதமர் மோடியை வியாழக்கிழமை சந்தித்த அவர் 25 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அவரிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை மாலை தமிழ்நாடு இல்லத்தில் சிபிஐஎம் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் சிபிஐ கட்சியின் பொதுச்செயலாளர் து.ராஜா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பில் அரசியல் நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவா்களையும் அவா் சந்தித்துப் பேசுகிறாா்.