முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்புப் பகுதியில் தொடர் மழை: மின் உற்பத்தி அதிகரிப்பு
கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் லோயர் கேம்பில் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது, இதன் எதிரொலியாக கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதிகளில் தொடர் மழை கடந்த மூன்று நாள்களாக பெய்து வருகிறது.
இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணைப் பகுதியின் நீர்பிடிப்புப் பகுதிகளான முல்லையாறு, பெரியாறு, தேக்கடி ஏரி உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
புதன்கிழமை பெரியாறு அணையில் 110 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 39.4 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. வியாழக்கிழமை பெரியாறு அணையில் 60 மி.மீ., தேக்கடி ஏரியில் 28.0 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.
புதன்கிழமை அணைக்குள் வினாடிக்கு 2,808 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், வியாழக்கிழமை அணைக்குள் வினாடிக்கு 4,289 கன அடி தண்ணீர் வந்தது. அதே நேரத்தில் தமிழகப் பகுதிக்கு அணையிலிருந்து வினாடிக்கு 1,400 கனஅடியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் லோயர் கேம்ப் பில் 126 மெகவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
அணை நிலவரம்: முல்லைப் பெரியாறு அணையில் புதன்கிழமை நீர்மட்டம் 131.70 அடியாகவும், வியாழக்கிழமை 132.75 அடியாகவும் இருந்தது. ஒரே நாளில் ஒரு அடி உயரத்தை எட்டியது. வியாழக்கிழமை காலை நீர் மட்டம் 132.75 அடி (மொத்த உயரம் 142).
நீர் இருப்பு 5,341 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 4,289 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1,400 கன அடி வெளியேற்றப்பட்டது.
பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் லோயர்கேம்ப்பிலுள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் 3 மின்னாக்கிகளில், தலா 42 மெகாவாட் என மொத்தம், 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த மே 16-இல் 43 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டது, ஜூன் 16 -இல் 126 மெகாவாட்டாக அதிகரித்து உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.