பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா, கரோனா பெருந்தொற்று பொதுமுடக்கம் மற்றும் தொடர் வருவாய் இழப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள அசையா சொத்துக்களை ஏலம் விடுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. ஆனாலும் ஏர் இந்தியாவை வாங்க தனியார் நிறுவனங்கள் வாங்க முன்வராத நிலையில் மேலும் சில சலுகைகளையும் அறிவித்தது மத்திய அரசு.
இந்நிலையில் தொடர் இழப்பு காரணமாக சமாளிக்க முடியாத செலவினங்களால் நாடு முழுவதும் 10 பெரு நகரங்களில் உள்ள அசையா சொத்துக்களை விற்க முடிவு செய்து அறிவித்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.
அதன்படி, ஏர் இந்தியா நிறுவனத்தின் தில்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 10 பெருநகரங்களில் உள்ள 14 அசையா சொத்துக்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் ஏர் இந்தியா நிறுவன அலுவலகங்கள், ஊழியர்களுக்கான குடியிருப்புகளை வாங்க விரும்புவோர் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூலை 8, 9 -ஆம் தேதிகளில் www.airindia.in என்ற இணையதளத்தில் நடைபெறும் ஏலத்தில் பங்கேற்கலாம் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.