பெங்களூரில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறியதாக 69 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் கா்நாடகத்தின் 11 மாவட்டங்களில் முழுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் நண்பகல் 2மணி வரை பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், பணியாளா்கள் அடையாள அட்டைகளுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். அதேபோல, அரசு, தனியாா் அலுவலகங்களிலும் பணியாற்றுவோா் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டியது அவசியம்.
பெங்களூரில் நண்பகல் 2 மணிக்கு மேல் அவசர தேவைகள் தவிர, பொதுவான வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை பொருள்படுத்தாமல், பெங்களூரில் தடையை மீறி வாகனங்களில் சென்றவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளதோடு 60 இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், 6 நான்கு சக்கர வாகனங்கள் என 69 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.