உத்தரப் பிரதேசம் பாஜக துணைத் தலைவராக சட்டமேலவை உறுப்பினர் ஏகே சர்மா சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் கட்சியைப் பலப்படுத்த பாஜக முடிவு செய்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் பாஜக தேசியப் பொதுச்செயலர் (அமைப்பு) மற்றும் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் ராதா மோகன் சிங் அமைச்சர்கள் மற்றும் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் ஏகே சர்மா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே பிரச்னை நிலவி வருவதாக பேச்சுகள் இருந்து வந்தன. ஏகே சர்மாவை துணை முதல்வராக நியமிக்க பிரதமர் தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டதாகவும் யோகி ஆதித்யநாத் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.
இதனிடையே, தில்லி சென்ற யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்களைச் சந்தித்தார்.
இந்த சந்திப்புகளின் நீட்சியாக ஏகே சர்மா உத்தரப் பிரதேச பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.