புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42,640 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு நாளில் மட்டும் 1,167 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து 15வது நாளாக நாட்டில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதேவேளையில், கடந்த மாதம் மார்ச் 23-ஆம் தேதிதான் கடைசியாக 50 ஆயிரத்துக்கும் கீழ் அதாவது 47 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. நேற்று புதிதாக 53 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 42 ஆயிரமாக அதாவது சுமார் 10 ஆயிரம் அளவுக்குக் குறைவாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (ஜூன் 22) வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
செவ்வாய்க் கிழமை காலை 9 மணி நிலவரப்படி, புதிதாக 42,640 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,99,77,861-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 6,62,521 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்கு 1,167 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,89,302-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 81,839 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,88,76,201-ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி:
திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 28,87,66,201 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 86,16,373 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.