சியோல்: கடந்த 10 நாள்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில், ஒருவருக்குக் கூட கரோனா உறுதி செய்யப்படவில்லை என்று வட கொரியா, உலக சுகாதார நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
வட கொரியா அளித்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்திருக்கும் உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், வட கொரியாவில், கடந்த 4ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 733 பேரில், 149 பேருக்கு கடுமையான நுரையீரல் தொற்று உள்ளிட்ட உடல் நலப் பிரச்னைகள் இருந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்குக் கூட கரோனா தொற்று இல்லை என்று சொல்லும் வட கொரியா மீது மருத்துவ நிபுணர்கள் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு வேளை அப்படி கரோனா இல்லை என்று பதிவானால், அந்நாட்டில் மிக மோசமான மருத்துவ உள்கட்டமைப்பு உள்ளது என்றுதான் கருத வேண்டும் என்கிறார்கள்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை வட கொரியா மிகத் தீவிரமாகக் கடைப்பிடித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை, வெளிநாட்டு தூதர்களை வெளியேற்றியது மற்றும் எல்லையோர வணிகம் மற்றும் போக்குவரத்துக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருப்பது போன்றவற்றையும் கைகொள்கிறது.
அதுபோல, இந்த கட்டுப்பாடுகளில் எந்த தளர்வும் தற்போதைக்கு அறிவிக்கப்படாது என்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.