பாஜகவுக்கு எதிராக உருவாகிறதா புதிய அணி?  எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு சரத் பவார் அழைப்பு

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்கும் பணியில் இறங்கியுள்ள தேசியவாதிகள் காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், பல முக்கியக் கட்சித் தலைவர்களின் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பாஜகவுக்கு எதிராக உருவாகிறதா புதிய அணி?  சரத் பவார் இன்று ஆலோசனை
பாஜகவுக்கு எதிராக உருவாகிறதா புதிய அணி?  சரத் பவார் இன்று ஆலோசனை

புது தில்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்கும் பணியில் இறங்கியுள்ள தேசியவாதிகள் காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், பல முக்கியக் கட்சித் தலைவர்களின் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று பிரசாந்த் கிஷோருடனான சந்திப்புக்குப் பிறகு, சரத் பவார், இன்று எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின், தேர்தல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர் அளித்த யோசனைப்படி, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ராஷ்டிர மஞ்ச் என்ற ஐக்கிய எதிர்க்கட்சிகள் அமைப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

அரசியலில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை எல்லாம் ஒன்றிணைத்து 2024-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை சந்திப்பதும், இந்தக் கூட்டணிக்கு தேசியவாதிகள் காங்கிரஸ் கட்சி தலைமையேற்பதுமே தற்போதைய திட்டம்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, பாஜகவிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்த யஷ்வந்த் சின்ஹா 2018-ஆம் ஆண்டு உருவாக்கிய கோஷமே ராஷ்டிர மஞ்ச் எனப்படும் ஐக்கிய எதிர்க்கட்சிகள் அமைப்பாகும்.

அந்த வகையில், வரும் மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்க்க, காங்கிரஸ் அல்லாத 15 எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, மாற்றுசக்தியை உருவாக்குவது என்பதே பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்திருக்கும் திட்டம்.

சரத் பவார் - பிரசாந்த் கிஷோர் இடையேயான சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகளின் கூட்டத்துக்கு இன்று மாலை 4 மணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிராக அணிசேரும் 15 எதிர்க்கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளன.

இந்தக் கூட்டத்தில், முன்னாள் மத்திய நிதித் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சன் சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி. ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, பாஜகவிலிருந்து விலகிய சுதீந்திர குல்கர்னி, சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் கன்ஷ்யாம் திவாரி உள்ளிட்டத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். திமுக சார்பில் திருச்சி சிவா பங்கேற்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com