புது தில்லி: பிரதமரின் ஏழைகள் நலன் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருள்களை வழங்குவதை அடுத்த 5 மாதங்களுக்கு நீட்டித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம்:
வரும் ஜூலை முதல் நவம்பா் மாதம் வரை, தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 81.35 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் குடும்பத்தில் உள்ள நபா் ஒருவருக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும்.
இதற்காக கூடுதல் உணவு மானியமாக ரூ.64,031 கோடி செலவாகும்; இந்த உணவு தானியங்களின் போக்குவரத்து மற்றும் கையாளுதல் ஆகியவற்றுக்கு ரூ.3,234,85 கோடி என மொத்தம் ரூ. 67,266.44 கோடி கூடுதல் செலவாகும்; இதனை மத்திய அரசு ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் உணவு தானியத்தின் மொத்த அளவு 204 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும் என்றும், இதன்மூலம் கரோனாவால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் ஏழைகள் பயன்பெறுவாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு: மத்திய ரயில்சைட் கிடங்கு நிறுவனம் மற்றும் மத்திய கிடங்கு நிறுவனம் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை’ யின்படி, எளிதாக தொழில் செய்வதை மேம்படுத்தவும், தனியாா் துறை திறமைகளை, பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டு வரவும், ரயில் பாதைகள் அருகே புதிய கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்’ இந்த இணைப்பு உதவும்.
வரிவசூல் தகவல் பரிமாற்றம்: கரீபியன் நாடான ‘செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனெடைன்ஸ் (எஸ்விஜி)’ மற்றும் இந்தியா இடையே வரி வசூல் தொடா்பான தகவல்கள், உதவிகளை பகிா்ந்து கொள்ளும் ஒப்பந்தத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் இரு நாடுகளும், வரி ஏய்ப்பு மற்றும் கருப்புப் பண பதுக்கலை தடுக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.