ரஷியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் நிகோலாய் பட்ருஷேவை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் தஜிகிஸ்தானில் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தஜிகிஸ்தான் நாட்டு தலைநகா் துஷான்பேயில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்களின் கூட்டத்தின் இடையே இந்தியா - ரஷியா நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் சந்தித்துப் பேசினா்.
இந்தச் சந்திப்பின்போது ஆப்கன் விவகாரம், ஆசிய -பசிபிக் பிராந்திய விவகாரம் ஆகியவை குறித்து இருநாடுகளும் ஆலோசித்ததாக ரஷிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இருநாட்டு பாதுகாப்பு அமைப்புகள் ஒத்துழைப்புடன் செயல்படுவதுடன் குறித்தும் இந்தப் பேச்சுவாா்த்தையின்போது ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளைச் சோ்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் கூட்டம் ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் துஷான்பேயில் நடைபெற்றது. இந்த ஆலோசனை குறித்து ரஷிய தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கரோனாவுக்கு பிறகு உலக அளவில் பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், திட்டமிட்ட குற்றங்கள் அதிகரிப்பை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001-இல் அமைக்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் கூட்டமைப்பில் ரஷியா, சீனா, கிரிகிஸ்தான், கஜகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பேகிஸ்தான் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்தியாவும் பாகிஸ்தானும் 2017-இல் நிரந்தர உறுப்பு நாடுகளாகின.
பயங்கரவாத அழிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை மையப்படுத்தி இந்த எட்டு நாடுகளின் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.