பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வென்றால் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த கேஜரிவால் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அரவிந்த கேஜரிவால் வெளியிட்ட டிவிட்டரில்,
அதிக செலவுகளுக்கிடையே குடும்பம் நடத்துவது பெண்களுக்கு மிகவும் சிரமமாக உள்ள காரணத்தால், தில்லியில் அனைத்து குடும்பங்களுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. அதனால் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
பஞ்சாபில் உள்ள பெண்களும் மகிழ்ச்சியின்றி உள்ளனர். ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பஞ்சாபிற்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். நாளை சண்டீகரில் சந்திப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க அனைத்துக் கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றது.
இந்நிலையில், பஞ்சாப் பேரவையின் எதிர்க்கட்சியான ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த கேஜரிவால் கடந்த வாரம் சண்டீகரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார். இந்நிலையில், நாளை மீண்டும் சண்டீகர் செல்லவுள்ளார்.
இந்த பயணத்தின் போது செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது மேலும் பல தேர்தல் வாக்குறுதிகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.