கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்வது பற்றி அவர் கூறியது:
"கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களால் இறுதிச் சடங்கு செய்ய முடிவதில்லை. இது கூடுதல் மன உளைச்சலை உண்டாக்குகிறது. இதைச் சரி செய்யும் வகையில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. உடல்களை ஒரு மணி நேரம் மட்டும் வைத்துக்கொள்ளலாம்."
இதைத் தொடர்ந்து, கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி அவர் கூறுகையில், "புதிதாக 13,550 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 104 பேர் பலியாகியுள்ளனர். 10,283 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 27,97,779 பேர் குணமடைந்துள்ளனர்.
நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 11 சதவிகிதம்" என்றார்.