ஒடிசாவில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், 11 மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலத்தில் அங்குல், போலாங்கீர், பாலாசோர், பாத்ராக், தென்கனல், கன்சம், ஜஜ்பூர், ஜர்சுங்குடா, கெந்த்ராபரா, கோரபுட் மற்றும் சோனிபூர் ஆகிய மாவட்டங்களில் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கரோனா மூன்றாவது அலைக்கு முன்பாக மாநிலத்திலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க வேண்டும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் சுகாதாரத் துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஜூன் 21-ம் தேதி முதல் ஒடிசாவில் ஒரு நாளுக்கு 3 லட்சத்திற்கும் குறையாமல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. எனினும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், செவ்வாய்க் கிழமை 1.18 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே சுகாதாரத் துறையால் செலுத்த முடிந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இன்று (ஜூன் 30) காலை 38,380 குப்பி தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் இருந்தன. அவை மக்களுக்கு செலுத்தப்பட்டன.
மாநிலத்திற்கான அடுத்தக் கட்டத் தடுப்பூசி ஜூலை 2-ம் தேதி கிடைக்கும் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.