கரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நந்த்குமார் சிங் செளகானுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாஜக உறுப்பினர் நந்த்குமார் சிங் சௌகான் செவ்வாய்க்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 69. கடந்த 11-ம் தேதி கரோனா தொற்று பாதிக்கப்பட்டு, குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று பிரிந்தது.
அவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் புதன்கிழமை புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான ஷாஹ்பூரில் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
பாஜக உறுப்பினர் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாடாளுமன்ற நடவடிக்கைகள், நிறுவன திறன்கள் மற்றும் பாஜகவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் முக்கிய பங்காற்றியவர் நந்த்குமார் சிங். மத்தியப் பிரதேசத்தில் அவரது பங்களிப்பு மறக்கமுடியாதது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் "ஓம் சாந்தி" என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், நந்த்குமார் சிங் மறைவுக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகானும் வருத்தம் தெரிவித்தார்.