லக்னௌ: பாஜக எம்.பி. கௌஷல் கிஷோரின் மகன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், இது யாரையோ திட்டமிட்டு சிக்கவைக்க நடத்தப்பட்ட நாடகம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோஹன்லால்கஞ்ச் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கௌஷல் கிஷோரின் மகன் ஆயுஷ் (30). இன்று அதிகாலை 2 மணியளவில் அவர் மாடியோன் என்ற பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.
இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், வேண்டுமென்றே யாரையோ சிக்கவைக்க, ஆயுஷ் தனது மைத்துனரை துப்பாக்கியால் சுட வைத்து நாடகமாடியிருப்பதாக லக்னௌ காவல் ஆணையர் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் புகாரளிக்கவில்லை என்றும், துப்பாக்கி மட்டும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.