புது தில்லி: வன உயிரினங்களையும், அவற்றின் வாழ்விடத்தையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
உலக வன உயிரினங்கள் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. அதனையொட்டி, வன உயிரினங்களைப் பாதுகாக்க அா்ப்பணிப்புடன் கூடிய முயற்சி மேற்கொள்ளப்படுவதோடு, வளமான சுற்றுச்சூழல் சமநிலையை பூமியில் நிலைநாட்ட வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்தாா்.
அதுபோல, தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘வன உயிரினங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருபவா்களுக்கு எனது வணக்கங்கள். சிங்கம், புலி, சிறுத்தைகள் என பல்வேறு வன உயிரினங்களின் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாக உயா்ந்து வருகிறது. வன உயிரினங்களையும், அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’ என்று தெரிவித்தாா்.