பாட்னா: நாலந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கரோனா தொற்று பாதித்து மாணவர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, சக மாணவர்கள் பீதியடைந்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட மாணவர் சுபேந்து சேகருக்கு(23), சளி மற்றும் இருமல் ஏற்பட்டதன் காரணமாக உடனடியாக ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு அனுப்பப்பட்டார். அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவர் பெகுசராய் மாவட்டத்தில் வீட்டு தனிமையில் இருந்த இவர் திங்கள் இரவு திடீரென உயிரிழந்தார்.
நாலந்தா பல்கலையில் இறுதியாண்டு படிக்கும் மாணவர் கரோனா காரணமாக உயிரிழந்ததையடுத்து, முதலாண்டு படிக்கும் மாணவர்கள் பல்கலைக்கழக தேர்வை ரத்து செய்யவேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் கரோனா தொற்று பரவுவது குறித்து மாணவர்கள் அச்சப்படுகின்றனர். சுபேந்து சேகர் இறந்ததைத் தொடர்ந்து, அவருடன் தொடர்புகொண்ட ஒன்பது மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதால் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளதாக மாணவர்கள் கருதுகின்றனர். எனவே, கல்லூரி வளாகத்திற்குள்ளேயே தனிமைப்படுத்தும் மையத்தை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்கள் அனைவருக்கும் ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனை செய்ய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி கரோனா சோதனை செய்த மாணவர்களின் முடிவுகளுக்காக காத்திருக்கின்றன.
நாங்கள் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எடுத்து வருகிறோம். மாணவர்கள் பீதியடையத் தேவையில்லை. நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று பிகார் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பிரத்யாய் அம்ரித் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.