தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் முதல் கரோனா தடுப்பூசியை வியாழக்கிழமை செலுத்திக் கொண்டார்.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாகச் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஜனவரி 16-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 26 வரையில் முதற்கட்டமாக 1.40 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி போடும் இரண்டாம் கட்டப் பணி மார்ச் 1 முதல் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 45 வயதிற்கு மேற்பட்டவரும், 60 வயதிற்கு மேற்பட்டவரும் கரோனா தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 52 வயதான தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். இவர், கடந்த 10 ஆண்டுகளாக நீரிழிவு நோய்க்கான சிகிச்சையைப் பெற்று வருகிறார். மேலும் அவரது பெற்றோர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதுதொடர்பாக முதல்வர் கூறியதாவது,
எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் நானும் என் பெற்றோரும் கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டோம். தடுப்பூசி செலுத்திய பின்பு எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். தடுப்பூசி போடத் தகுதியுள்ளவர்கள் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், தேவையெனில் தடுப்பூசி மையங்கள் அதிகரிக்கப்படும் என்றார். இன்றுவரை நாட்டில் 1,66,16,048 பேர் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 17,407 பேருக்குத் தொற்றும், 89 பேர் பலியும் பதிவாகியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.