தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மனநலன் பாதிக்கப்பட்டவர் என உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் அவசர உதவி எண்ணான 112-ஐ தொடர்பு கொண்ட மர்ம நபர், தொல்லியல் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தாஜ் மஹாலுக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து தாஜ் மஹாலுக்குள் இருந்த பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. இதில், வெடிகுண்டு எதுவும் இல்லை என்றும், தொலைபேசி அழைப்பு வெறும் புரளி என்றும் தெரிய வந்தது.
ஃபிரோஸாபாத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பை ஆய்வு செய்த காவல்துறையினர் வெடி குண்டு மிரட்டல் விடுத்த வித் குமார் சிங் என்ற நபரை அடையாளம் கண்டனர். விசாரணையில் அவர் மனநலன் பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனினும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.