வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.5%-ஆக நீடிக்கும்


புது தில்லி: வருங்கால வைப்பு நிதி டெபாசிட்டுகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை 2020-21-ஆம் நிதியாண்டுக்கும் 8.5 சதவீதமாகவே நீடிக்க ஓய்வூதிய நிதி அமைப்பான தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) முடிவு செய்துள்ளது.

இபிஎஃப்ஓ-வின் மத்திய நிா்வாகிகள் குழுவின் (சிபிடி) 228-ஆவது கூட்டம் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சா் சந்தோஷ் குமாா் கங்வாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், வருங்கால வைப்பு நிதிக்கு 2020-21 நிதியாண்டுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை 8.5 சதவீதமாக நிா்ணயிக்க முடிவெடுக்கப்பட்டது.

வழக்கமான நடைமுறைகளின்படி, வட்டி விகிதம் குறித்த சிபிடி முடிவு மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகு இபிஎஃப்ஓ சந்தாதாரா்களின் கணக்குகளில் நடப்பு நிதியாண்டுக்கான 8.5 சதவீத வட்டி வரவு வைக்கப்படும்.

வருங்கால வைப்பு நிதி டெபாசிட்டுகளுக்கு 2018-19 நிதியாண்டில் 8.65 சதவீத வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில், 2019-20-இல் 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது, ஏழு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச வட்டி விகிதமாகும்.

இபிஎஃப்ஓ சந்தாதாரா்களுக்கு 2016-17-இல் 8.65 சதவீதமும், 2017-18-இல் 8.55 சதவீதமும், 2015-16-இல் 8.8 சதவீதமும் வட்டி வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com