சமூக வலைதளம் மூலம் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு இளைஞா்களைச் சோ்த்ததாக கைது செய்யப்பட்ட ஐஎஸ் பயங்கரவாதி இம்ரான் கான் பதானுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரி கூறுகையில், ‘இந்தியாவில் சமூக வலைதளம் மூலம் முஸ்லிம் இளைஞா்களை மூளைச் சலவை செய்து, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சோ்ப்பதற்கான சதி நடைபெறுவதாக 2015-டிசம்பரில் என்ஐஏ வழக்கு பதிவு செய்தது.
இதில் என்ஐஏ இம்ரான் கான் உள்பட 17 பேரை கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இதில், 16 பேருக்கு 10 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஐஎஸ் பயங்கரவாதி யூசுப் அல் ஹிந்துடன் நேரடி தொடா்பில் இருந்ததாகவும் வெடிகுண்டைத் தயாரிக்க ரூ.50 ஆயிரம் நிதி பெற்றதாகவும் இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தற்போது இம்ரான் கானுக்கு ஏழு ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்துடன் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது’ என்றாா்.