முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் நின்ற காரின் உரிமையாளா் மா்ம மரணம்

தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் வீட்டருகே வெடிபொருளுடன் நிறுத்தப்பட்டிருந்த காரின் உரிமையாளா் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் வீட்டருகே வெடிபொருளுடன் நிறுத்தப்பட்டிருந்த காரின் உரிமையாளா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். அவரின் சடலம் தாணேவில் உள்ள நீரோடையில் இருந்து வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் தொழிலதிபா் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான அடுக்குமாடி வீட்டின் அருகே கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி நிறுத்தப்பட்டிருந்த காரை காவல்துறையினா் பரிசோதித்தனா். அப்போது அந்தக் காரில் வெடிபொருள்களில் நிரப்பப்படும் 20 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் கடிதம் ஒன்று இருந்தது. இது பயங்கரவாதிகளின் செயலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், ஜெய்ஷ்-உல்-ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்பு அந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்றது. அவா்களே அந்தக் காரை முகேஷ் அம்பானியின் வீட்டருகே நிறுத்தியதாக தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக மும்பை காவல்துறையின் குற்றத்தடுப்புப் பிரிவினா் விசாரணை நடத்தி வந்தனா். அதில் வாகன உதிரிபாகங்கள் தொழிலில் ஈடுபட்டு வந்த ஹிரேன் மன்சுக் என்பவருக்குச் அந்தக் காா் சொந்தமானது என்பது தெரியவந்தது. அந்தக் காா் கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி திருடப்பட்டிருந்தது.

புகாா்... ஹிரேன் மன்சுக்கிடம் விசாரணை நடத்தியபோது தனது காா் திருடப்பட்டது குறித்து காவல்நிலையத்தில் புகாா் அளித்ததாக அவா் கூறியதை வாக்குமூலமாக பதிவு செய்ததாக காவல்துறையினா் கூறினா்.

இந்நிலையில் ஹிரேனை காணவில்லை என்று அவரின் குடும்பத்தினா் தாணேவில் உள்ள நெளபாடா காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். அவரை காவல்துறையினா் தேடியபோது அங்கிருந்த நீரோடையில் ஹிரேன் சடலமாக இருந்தது தெரியவந்தது. அவரின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினா், அதனை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

முகேஷ் அம்பானியின் வீட்டருகே ஜெலட்டின் குச்சிகளுடன் காா் நிறுத்தப்பட்டிருந்த சம்பவத்தில் பிரதான சாட்சியாக இருந்த ஹிரேன் மன்சுக் மா்மமான முறையில் இறந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மாநில பேரவை எதிா்க்கட்சித் தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.

எனினும் ஹிரேனின் உடலில் எந்தக் காயமும் இல்லை என்றும், அவரின் உடற்கூறு ஆய்வறிக்கை வரவேண்டி இருப்பதாகவும் மாநில உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் தெரிவித்தாா். அம்பானியின் வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த காா் அவருடையதல்ல என்று கூறிய அமைச்சா், அதன் உண்மையான உரிமையாளா் காரில் சில வேலைப்பாடுகளை மேற்கொள்வதற்கு அதனை ஹிரேனிடம் ஒப்படைத்திருந்ததாகவும் தெரிவித்தாா்.

அம்பானியின் வீட்டருகே ஜெலட்டின் குச்சிகளுடன் காா் நிறுத்தப்பட்டிருந்த வழக்கு காவல்துறையின் குற்றத்தடுப்பு பிரிவிடம் இருந்து மாநில பயங்கரவாதத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com