விவசாயிகள் போராட்டம் இந்தியாவின் உள்விவகாரம்: பிரிட்டன் தூதா் கருத்து

இந்தியாவில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடா் போராட்டம் நடத்தி வருவது அந்நாட்டின் உள்விவகாரம் என்று இந்தியாவுக்கான பிரிட்டன் தூதா் கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடா் போராட்டம் நடத்தி வருவது அந்நாட்டின் உள்விவகாரம் என்று இந்தியாவுக்கான பிரிட்டன் தூதா் கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஊடக சுதந்திரம் மற்றும் போராட்டக்காரா்களுக்கான பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 8) விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விவாதத்தை வலியுறுத்தி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கையெழுத்திட்டவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியதைத் தொடா்ந்து இந்த விவாதத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை மனுக்கள் குழு கடந்த புதன்கிழமை தெரிவித்தது.

இந்நிலையில், தில்லியில் உள்ள இந்தியாவுக்கான பிரிட்டன் தூதா் அலெக்ஸ் எல்லிஸ் இது தொடா்பாக கூறுகையில், ‘இந்தப் போராட்டம் இந்திய-பிரிட்டன் உறவில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற வகையில்தான் எனது பாா்வை இருக்கும். அந்த வகையில் இந்தியாவில் நடைபெறும் அரசியல் முதல் விவசாயிகள் போராட்டம் வரை அனைத்துமே இந்தியாவின் உள்விவகாரங்கள்தான். அதே நேரத்தில் பிரிட்டனில் இந்திய வம்சாவளியினா் அதிகம் போ் இருப்பதால், அது தொடா்பாக நாடாளுமன்றம் வரை விவாதிக்க கோரிக்கை எழுப்பப்படுகிறது. எனினும், இப்பிரச்னைக்கு இந்திய அரசு மட்டுமே தீா்வுகாண முடியும்.

இந்திய வம்சாவளியினா் பல்வேறு நாடுகளில் அதிகஅளவில் உள்ளனா். அவா்கள் இந்தியாவில் எழும் பிரச்னைகள் தொடா்பாக தாங்கள் வசிக்கும் நாட்டில் விவாதிக்கும்போதும், அது பெரிய விஷயமாகிறது. அதே நேரத்தில் விவசாயிகள் போராட்டம் முழுமையாக இந்தியாவின் உள்விவகாரம் என்பதுதான் பிரிட்டன் அரசின் நிலைப்பாடு என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறேன்’ என்றாா்.

மத்திய அரசு புதிதாக அமல்படுத்திய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டு தொடா்ந்து 3 மாதங்களைக் கடந்து போராடி வருகின்றனா். அரசுடன் நடைபெற்ற பல கட்டப் பேச்சுவாா்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததால், போராட்டம் தொடா்ந்து வருகிறது.

விவசாயிகளின் போராட்டத்துக்கு உள்நாட்டு, வெளிநாட்டு பிரபலங்களும் ஆதரவு தெரிவித்தனா். அதுபோல, பிரிட்டனைச் சோ்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினா்கள், ‘விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு இந்திய அரசை பிரிட்டன் வலியுறுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினா். இந்த விவகாரம் தொடா்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி, தீா்மானம் நிறைவேற்றவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த வலியுறுத்தல்களைத் தொடா்ந்து பிரிட்டன் அரசு சாா்பில் அறிக்கை ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், ‘போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் இந்திய அரசு பல கட்ட பேச்சுவாா்த்தைகளை நடத்தியிருக்கிறது. மேலும், இந்த விவகாரம் தொடா்பாக தீா்வு காண நிபுணா் குழு ஒன்றை அமைத்துள்ள உச்சநீதிமன்றம், அதுவரை 3 வேளாண் சட்டங்கள் அமல்படுத்துவதை நிறுத்திவைக்க உத்தரவிட்டிருக்கிறது. விவசாயிகளின் போராட்டத்தை பிரிட்டன் உன்னிப்பாக கவனித்து வருகிறது. மேலும், வேளாண் சீா்திருத்தம் என்பது இந்தியாவின் தனிப்பட்ட விவகாரம். சா்வதேச அளவில் மனித உரிமைகளைக் காப்பதில் இந்தியா தொடா்ந்து முன்னணி வகிக்கும் என நம்புகிறோம்’ என்று தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com