திருப்பதி: ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாளான திங்கள்கிழமை காலை கைலாச கிரிவலம் நடைபெற்றது.
இதற்காக காலை கோயிலிலிருந்து உற்சவமூா்த்திகளான காளஹஸ்தீஸ்வரா், ஞானபிரசுனாம்பிகை தாயாா் இணைந்தும், ஞானபிரசுனாம்பிகை அம்மன் தனியாகவும் மர சப்பரத்தில் மாடவீதியில் எழுந்தருளினா்.
பின்னா் அங்கிருந்து காளஹஸ்தி கோயில் அமைந்துள்ள கைலாசகிரியை உற்சவமூா்த்திகள் வலம் வந்தனா். கோடை வெயிலையும் பொருள்படுத்தாமல் ஏராளமான பக்தா்கள் இந்த கிரி வலத்தில் பங்கேற்று சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டே கிரிவலம் வந்தனா்.
கிரிவலம் வந்த பக்தா்களுக்கு பல்வேறு தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், நீா்மோா், பானகம், குடிநீா் அன்னபிரசாதங்கள் உள்ளிட்டவற்றை வழங்கின. மதியத்திற்கு முன் கிரிவலத்தை முடித்துக் கொண்டு கோயிலுக்குள் எழுந்தருளிய உற்சவமூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், இளநீா், பஞ்சாமிா்தம், விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
பின்னா் இரவு காளஹஸ்தீஸ்வரா், ஞானபிரசுனாம்பிகை அம்மனுடன் இணைந்து குதிரை வாகனத்திலும், ஞானபிரசுனாம்பிகை அம்மன் தனியாக சிம்ம வாகனத்திலும் மாடவீதியில் வலம் வந்தனா். இந்நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள், பக்தா்கள் திரளாக பங்கு கொண்டனா்.