சண்டிகர்: நாடாளுமன்றத்தில் இரண்டு முறை உறுப்பினராக இருந்த பாஜக எம்.பி. ராம் ஸ்வரூப் ஷர்மா, தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல்கள் கூறுவதாவது, 62 வயது ராம் ஸ்வரூப் ஷர்மா, தில்லி ஆர்எம்எல் மருத்துவமனைக்கு அருகே உள்ள கோமதி அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள தனது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டது. வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. அவரது ஊழியர் காவல்துறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில், விரைந்துச் சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த ஆறு மாதங்களாக மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வந்த ராம், கடந்த மூன்று நாள்களுக்கு முன்புதான் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். ஏற்கனவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றதும் தெரிய வந்துள்ளது.
ராம் ஸ்வரூப்பின் மனைவி சார் தாம் கோயிலுக்குச் சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் நேரிட்டுள்ளது.