புது தில்லி: உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
மத்திய சட்டத்துறைக்கான நிதி ஒதுக்கீடு கோரிக்கைகள் குறித்துஆய்வு செய்த தனிநபர், சட்டம் மற்றும் நீதித் துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு, தனது அறிக்கையினை செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் தற்போது பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலவும் காலிப்பணியிடங்களை சமன்செய்வதற்காக, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாக குழு உறுப்பினர்கள் கருதுகின்றனர்.
நாடுமுழுவதும் நீதிமன்றங்களில் நிலவம் காலிப்பணியிடங்கள் மற்றும் தேங்கியுள்ள வழக்குகள் குறித்து ஆலோசித்த குழு உறுப்பினர்கள், பல்வேறு வகையான நீதிமன்றங்களிலும் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பது நீதிபதிகளின் வேலை நாட்களைக் காட்டுவதன் முலமாக சாத்தியப்படும்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 ஆக இருக்கும்போது, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மட்டும் 62 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பதில் எந்த தர்க்கமும் இல்லை என்று இந்தக்குழு கருதுகிறது. எனவே இருவரிடையே சமநிலையை பேணும் பொருட்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த வேண்டும் என்று சட்டத்துறைக்குப் பரிந்துரைக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.