நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஏழை மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதன்காரணமாக தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது சுட்டுரைப் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “ஏழைக் குடும்பங்களுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
மேலும் கரோனா தடுப்பூசி செலுத்துவதை தேசிய கொள்கையாக மத்திய மாநில அரசுகள் அறிவித்து செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள மாயாவதி கரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த பிரதமர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.