சிக்கிம் மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு காரணமாக இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் அறிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் பல்வேறு நகரங்களில் இரவு நேரப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதிகரிக்கும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வியாழக்கிழமை இரவு முதல் இரவுநேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக சிக்கிம் மாநில அரசு அறிவித்துள்ளது.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனவும் பொதுமுடக்க நேரத்தில் உணவகங்கள், மதுபான விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனிமனித இடைவெளிகளைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் அவசியம் பின்பற்ற வேண்டும் என மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் கேட்டுக் கொண்டார்.