உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் துணை காவல் ஆய்வாளர் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கூடுதல் காவல்துறை இயக்குனர் ராஜீவ் கிருஷ்ணா கூறுகையில்,
உருளைக்கிழங்கு அறுவடை தொடர்பான தகராறில் சகோதரர்கள் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையின் காரணமாகத் துணை காவல் ஆய்வாளர் மற்றும் காவலர் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் ஓடத் தொடங்கினார், அவரை பின்தொடர்ந்த பிரசாந்த் ஓடியபோது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய ஒரு தனிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் காவல் இயக்குனர் தெரிவித்தார்.
துணை காவல் ஆய்வாளர் உயிரிழந்ததற்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். மேலும், ஒரு சாலைக்கு துணை காவல் ஆய்வாளரின் பெயர் வைக்கப்படும் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் புலந்த்ஷாஹரில் உள்ள சடாரி என்ற ஊரில் வசிப்பர் ஆவார். 2005-ல் உ.பி. காவல்துறையில் காவலராக நியமிக்கப்பட்டவர், பின்னர் 2015-ல் துணை காவல் ஆய்வாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.