கரோனா விதிமுறைகளை பின்பற்றாவிடில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. மகாராஷ்டிரத்தில் நேற்று அதிகபட்சமாக 35 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் பீட் மாவட்டத்தில் 10 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் கரோனா பரவல் குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதன்பின்னர் துணை முதல்வர் அஜித் பவார் வெளியிட்டுள்ள தகவலில்,
ஏப்ரல் 2 ஆம் தேதி வரை மாநிலத்தில் கரோனா பரவல் எவ்வாறு அதிகரித்து வருகிறது என்று கண்காணிப்போம். அதைப்பொறுத்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட கரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்றாவிடில் எங்களுக்கு வேறு வழியில்லை, மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மால்கள், சந்தைகள் மற்றும் தியேட்டர்கள், திருமண விழாக்கள் ஆகியவை குறித்து ஏப்ரல் முதல் வாரத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.