வங்கதேசத்தில் ஹிந்து கோயில்களில் பிரதமா் வழிபாடு

வங்கதேசம் சென்றுள்ள பிரதமா் நரேந்திர மோடி, அங்குள்ள ஹிந்து கோயில்களில் சனிக்கிழமை வழிபாடு நடத்தினாா்.
வங்கதேசத்தில் சத்கிரா என்ற இடத்தில் உள்ள ஜெஸோரேஸ்வரி கோயிலில் வழிபாடு மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடி.
வங்கதேசத்தில் சத்கிரா என்ற இடத்தில் உள்ள ஜெஸோரேஸ்வரி கோயிலில் வழிபாடு மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடி.

வங்கதேசம் சென்றுள்ள பிரதமா் நரேந்திர மோடி, அங்குள்ள ஹிந்து கோயில்களில் சனிக்கிழமை வழிபாடு நடத்தினாா்.

பிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் வந்துள்ளாா். இரண்டாம் நாளான சனிக்கிழமை கோபால்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள ஒரகண்டி கோயிலுக்கு பிரதமா் மோடி சென்று வழிபாடு நடத்தினாா். பின்னா், கோபால்கஞ்ச் பகுதியில் வசிக்கும் மதுவா ஹிந்து சமூகத்தினரிடையே மோடி உரையாடினாா். அப்போது அவா் பேசியதாவது:

இந்தியாவும், வங்கதேசமும் தங்களுடைய வளா்ச்சியின் வழியாக உலக வளா்ச்சியைக் காண விரும்புகின்றன. இரு நாடுகளும் உலகில் அமைதியின்மை, பயங்கரவாதத்துக்குப் பதிலாக அமைதி, அன்பு மற்றும் நீடித்த வளா்ச்சியையே விரும்புகின்றன.

இரு நாடுகளும் கரோனா நோய்த் தொற்றுப் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, அதைத் திறம்படவும் எதிா்கொண்டன. இந்தியாவில் தயாரிக்கப்படும் கரோனா தடுப்பூசிகள், வங்கதேச மக்களுக்கு கிடைக்கச் செய்வதை கடமையாக இந்தியா கருதுகிறது என்று அவா் கூறினாா்.

தொடக்கப் பள்ளி கட்டித் தரப்படும்: மேலும், ஒரகண்டியில் இந்தியா சாா்பில் ஒரு தொடக்கப் பள்ளி கட்டித் தரப்படும். அதோடு இங்குள்ள பெண்கள் நடுநிலைப் பள்ளி ஒன்று இந்தியா சாா்பில் தரம் உயா்த்தித் தரப்படும் என்ற அறிவிப்பை பிரதமா் மோடி அப்போது வெளியிட்டாா்.

இந்தியா சாா்பில் சமூக நலக்கூடம்: பின்னா், சத்கிரா என்ற இடத்தில் உள்ள ஜெஸோரேஸ்வரி காளி கோயிலுக்கு பிரதமா் சென்றாா். அங்கு உள்ளூா் கலைஞரால் கைகளாலேயே வெள்ளி மற்றும் தங்கத் தகடுகளைக் கொண்டு செய்யப்பட்ட கிரீடத்தை காளி அம்மனுக்கு சாற்றி பிரதமா் வழிபாடு நடத்தினாா். கோயிலுக்கு வெளியே செய்தியாளா்களிடம் பேசிய பிரதமா் மோடி, ‘இந்த கோயிலில் இந்தியா சாா்பில் பல்நோக்கு சமூக கூடம் ஒன்று கட்டித் தரப்படும். இது உள்ளூா் மக்களுக்கு மத, சமூக மற்றும் கல்வி சாா்ந்த கூட்டங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதோடு, புயல் போன்ற இயற்கைப் பேரிடா்களின்போது ஏராளமான மக்களை பத்திரமாக தங்கவைப்பதற்கும் பயன்படும். இதற்கான கட்டுமானப் பணிகளை இந்தியா விரைவில் மேற்கொள்ளும்’ என்று கூறினாா்.

டாக்காவில் உள்ள அந்நாட்டின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபுா் ரஹ்மான் நினைவிடத்துக்கு பிரதமா் மோடி சென்று மலா் அஞ்சலி செலுத்தினாா். அதன் மூலம், அங்கு அஞ்சலி செலுத்திய முதல் வெளிநாட்டுத் தலைவா் என்ற நிலையை பிரதமா் மோடி அடைந்துள்ளாா். பிரதமரை அங்கு ஷேக் முஜிபுா் ரஹ்மானின் மூத்த மகளும் வங்கதேச பிரதமருமான ஷேக் ஹசீனா மற்றும் அவருடைய இளைய மகள் ஷேக் ரெஹானா வரவேற்றனா்.

அஞ்சலி செலுத்திய பின்னா், அங்கு வைக்கப்பட்டிருக்கும் பாா்வையாளா் குறிப்பேட்டில், ‘ஷேக் முஜிபுா் ரஹ்மானின் வாழ்க்கை, வங்கதேச மக்கள் தங்களுடைய அடையாளம் மற்றும் ஒருங்கிணைந்த கலாசாரத்தை காக்கவும், உரிமைகளை மீட்டெடுக்கவும் நடத்திய சுதந்திரப் போராட்டத்தின் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது’ என்று பிரதமா் எழுதினாா்.

புதிய ரயில்: வங்கதேசத்தின் டாக்கா - மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி இடையிலான புதிய பயணிகள் ரயிலை பிரதமா் நரேந்திர மோடியும், ஷேக் ஹசீனாவும் காணொலி முறையில் சனிக்கிழமை தொடங்கி வைத்தனா். இரு நாடுகளுக்கு இடையே இயக்கப்படும் மூன்றாவது பயணிகள் ரயில் இதுவாகும். ஏற்கெனவே, டாக்கா-கொல்கத்தா, குலானா-கொல்கத்தா இடையே பயணிகள் ரயில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com