புது தில்லி: மகாராஷ்டிரம், கர்நாடகம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், குஜராத், கேரளம், தமிழ்நாடு மற்றும் சட்டீஸ்கர் ஆகிய 8 மாநிலங்களில் ஒருநாள் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 68,020 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 84.5 சதவீதம் பேர் மேற்கண்ட 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் அதிக பட்சமாக ஒருநாள் கரோனா பாதிப்பு 40,414 ஆக உள்ளது. நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 5,21,808 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியை கடந்து விட்டது. இன்று காலை 7 மணி வரை, 6.05 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி, 72வது நாளான நேற்று, மொத்தம் 2,60,653 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,13,55,993-து எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 32,231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 291 பேர், கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.