தாராபுரத்தில் நாளை நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனைப் போட்டி நிலவுகிறது.
தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தாராபுரத்தில் நாளை நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பாஜக மாநில தலைவர் எல். முருகன் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். பிரமருடன் ஒரே மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிரதமரின் வருகையையொட்டி மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்ட நிலையில் பிரதமர் மோடி நாளை பிரசாரம் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.