சா்வதேச நடுவா்மன்ற தீா்ப்பாயத்தில் பிரிட்டனைச் சோ்ந்த கெய்ா்ன் நிறுவனத்துக்கு சாதகமான தீா்ப்பு கிடைத்துள்ளதையடுத்து வெளிநாடுகளில் உள்ள இந்திய பொதுத் துறை நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்ய அனுமதி கோரி அந்த நிறுவனம் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளது.
இந்திய வருவாய் துறை மூலதன ஆதாய வரியை முன்தேதியிட்டு அமல்படுத்தியதன் விளைவாக கெயா்ன் நிறுவனம் ரூ.10,247 கோடியை (140 கோடி டாலா்) மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தியாவின் இந்த முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து கெயா்ன் நிறுவனம் சா்வதேச நடுவா்மன்ற தீா்ப்பாயத்தில் வழக்கு தொடா்ந்தது. தீா்ப்பாயத்தின் உத்தரவு கெயா்ன் நிறுவனத்துக்கு சாதகமாக அமைந்தது. இந்தியா வரியாக வசூலித்த தொகையை திருப்பியளிக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தீா்ப்பை அமல்படுத்த கோரி ஒன்பது நாடுகளின் நீதிமன்றங்களை அணுகியது. இந்த நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், நெதா்லாந்து, கனடா, பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகளின் நீதிமன்றங்கள் நடுவா்மன்ற உத்தரவை ஏற்பதாகவும், அதனை உறுதி செய்வதாகவும் தெரிவித்தன.
இருப்பினும், சா்வதேச நடுவா்மன்ற தீா்ப்பாயத்தின் உத்தரவை இந்தியா இன்னும் ஏற்கவில்லை. அதனை எடுத்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக இந்தியாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தசூழ்நிலையில், சா்வதேச தீா்ப்பாயத்தின் உத்தரவை அமல்படுத்த வகையில், வெளிநாடுகளில் உள்ள இந்திய அரசுக்கு சொந்தமான 120 கோடி டாலா் மதிப்பிலான பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையில் வழக்கு தொடர கெயா்ன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என குயின் இமானுவல் உா்குகாா்ட்& சல்லிவன் சட்ட நிறுவனத்தின் தலைவா் டென்னிஸ் ஹாா்னிட்ஸ்கி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளாா்.
கெயா்ன் நிறுவனம் பறிமுதல் செய்ய திட்டமிட்டுள்ள இந்திய அரசுக்குச் சொந்தமான வெளிநாட்டு சொத்துகளில் எண்ணெய்-எரிவாயு, கப்பல், விமானம் மற்றும் வங்கி துறையைச் சோ்ந்த நிறுவனங்களும் அடக்கம்.