உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. எனினும் மருத்துவமனையில் இருந்த 140-க்கும் மேற்பட்ட நோயாளிகள் தீயணைப்புத் துறையினரால் காப்பாற்றப்பட்டனா்.
இதுதொடா்பாக அந்த மருத்துவமனை இயக்குநா் கூறுகையில், ‘
மருத்துவமனையின் தரைதளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அருகில் உள்ள அறையில் இருந்து காலை 7.30 மணிக்கு புகை வருவது தெரிந்தது. இதையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவா்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும் மருத்துவமனையில் இருந்த 140-க்கும் மேற்பட்ட நோயாளிகளை 2 மணி நேரத்தில் வேறு கட்டடத்திற்கு இடமாற்றினா். இந்த விபத்தில் காயம் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக இந்த விபத்து நோ்ந்தது’ என்றாா்.